
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து தயாரித்திருந்த படம் “ஜெய்பீம்”. வெகுஜன மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றுவருகிறது இப்படம்.
இப்படம், பழங்குடியின மக்களின் வாழ்வியலையும், அவர்களின் இன்னல்களையும் எடுத்துரைப்பது போல் கூறப்பட்டதால் அநேக மக்கள் இதை கொண்டாடினர். ஆனால் குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்திவிட்டதாக நடிகர் சூர்யா மீது பாமக சார்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
ஒருசிலர் சூர்யாவை உதைத்தால் பணம் தருகிறோம் என்றும், சூர்யா வீட்டை பத்தாயிரம் மக்கள் கொண்டு முற்றுகையிடுவோம் என்றும் பல மிரட்டல்களை சூர்யா மீது வைத்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் காட்டுநாயக்கன் பழங்குடி இன மக்கள் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர். மதுரையில் இன்று ஒன்று கூடிய காட்டுநாயக்கன் பழங்குடி இன மக்கள் சூர்யாவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கையில் எலி பாம்புகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படத்தில் எங்களை பற்றி ஒரு அடையாளத்தை பதிவு செய்துள்ளார் சூர்யா. இதுவரை எந்த நடிகரும் இதை செய்யவில்லை. யாரும் எங்களை பற்றி பேசியதும் இல்லை.
அவருக்கு எதாவது என்றால், எதிரானவர்கள் மீது பாம்பையும் விட தயங்கமாட்டோம் என்று கூறியுள்ளனர். மேலும், அவருக்கு ஆதரவாக அவருடன் எப்பவும் உடன் இருப்போம் என்றும் கூறியுள்ளனர்.




