பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘செம்பருத்தி’. நடிகை ப்ரியா ராமன் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இத்தொடரில் அவரது மூத்த மகன் ஆதி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் கார்த்திக்ராஜ்.
அவருக்கு ஜோடியாக ஷபானா ஷாஜகான் நடித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இத்தொடருக்கு ரசிகர்கள் ஏராளம். குடும்ப பெண்கள் பலரும் இந்த தொடருக்கு ரசிகைகளாக இருந்து வருகின்றனர்.
தொடரின் நாயகனாக நடித்துவரும் கார்த்திக் விலக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அதைத்தொடர்ந்து சில நாட்கள் ஒளிபரப்பான எபிசோட்களில் கார்த்திக் ராஜ் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களே இடம்பெற்றிருந்தன. இதனால் என்ன ஆனார் கார்த்திக் ராஜ் மீண்டும் எப்போது வருவார் என்பது போன்ற சந்தேகங்கள் ரசிகர்களிடம் எழுந்தன.
இந்நிலையில் கார்த்தி செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறியிருப்பதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து தொலைக்காட்சி அறிவித்துள்ள குறிப்பில் , “செம்பருத்தி தொடரை தனது அர்ப்பணிப்பு, கடின உழைப்பால் வெற்றியடைய வைத்த நடிகர் கார்த்திக்கு நன்றி. எதிர்பாராத சில காரணங்களால் அவருக்கு பதிலாக வேறொருவர் நடிக்க உள்ளார். அவரது பயணத்துக்கு எங்களுடைய வாழ்த்துகள். ஜீ தமிழ் உடனான அவரது தொடர்பு நீடிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.