
மலையாளத் திரைப்படமான ‘ஜல்லிக்கட்டு’, 2021ஆம் ஆண்டுக்கான ஆஸ்கருக்குப் போட்டியிட இந்தியாவின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’. ஹரீஷ்.எஸ் எழுதியிருந்த ‘மாவோயிஸ்ட்’ என்கிற சிறுகதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்த திரைப்படம் இது. 2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சகர்களிடமும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சிறந்த சர்வதேசத் திரைப்படம் என்கிற பிரிவில் இந்தியாவின் சார்பாகப் போட்டியிட ‘ஜல்லிக்கட்டு’ தேர்வாகியுள்ளது. இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு இந்தப் படத்தைத் தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்துத் தேர்வுக் குழுவின் தலைவர் ராகுல் ராவைல் பேசுகையில், “மனிதர்களுக்குள் இருக்கும் முக்கியப் பிரச்சினைகளை இந்தப் படம் பேசுகிறது. நாம் விலங்குகளைவிட மோசமானவர்கள் என்பதைக் காட்டுகிறது. மனிதர்களின் உணர்வுகள் விலங்குத்தன்மையைவிட மோசமானதாக இருக்கிறது என்பதை இந்தப் படம் அற்புதமாகச் சித்தரித்திருக்கிறது.
நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய படைப்பு இது. லிஜோ மிகத் திறமையான இயக்குநர். இந்தப் படத்தில் காட்டப்பட்ட உணர்ச்சிகள் எங்களை உலுக்கிவிட்டன. தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் இடங்களின் சங்கமம் இந்தப் படம் என்று நாங்கள் நினைத்தோம். அதனால்தான் இந்தப் படத்தைத் தேர்வு செய்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.





