
“NOTA”படத்திற்காக சுமார் 150 இசைக்கலைஞர்களை ஒரே இடத்தில் சங்கமிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சாம் சி எஸ். இது குறித்து அவர் கூறும்போது, ‘
“பல ஆண்டுகளாக நான் ஒரு விஷயத்தை செய்யும் கனவில் இருந்து வந்தேன். இறுதியாக, NOTA படத்தின் மூலம் அதை நனவாக்கி இருக்கிறார் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா. அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுக்காமல் இருந்திருந்தால், இது சாத்தியமே இல்லை. இந்த படத்தக்கு பிரமாண்ட ஆர்க்கெஸ்ட்ரா இசைக்கோர்ப்பு செய்யும் யோசனையை நான் கூறிய போது, எந்தவித மறுப்பும் சொல்லாமல் உடனடியாக ஒப்புக் கொண்டார்” என தயாரிப்பாளர் ஞானன்வேல்ராஜாவை பற்றி புகழ்கிறார் சாம் சிஎஸ்.
A RISE OF A LEADER என்ற பாடலுக்கு ஆர்க்கெஸ்ட்ரா இசை அமைத்ததை பற்றி விளக்கமாக கூறும்போது, “இந்த பாடலில் சூழல் ஒரு ஆழ்ந்த, சக்தி வாய்ந்த இசையை கோரியது. இயக்குனர் ஆனந்த் ஷங்கருடன் இதைப் பற்றி பேசுகையில், இந்த இடத்தில் மாசிடோனியா சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா இருந்தால் படத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தும் என்று உணர்ந்தேன். ஸ்ட்ரிங்ஸ் மற்றும் பிராஸ் இசைக்கலைஞர்கள் 150க்கும் மேற்பட்டோர் பின்னணி இசையில், குறிப்பாக இந்த பாடல் இசைக்கோர்ப்பில் பங்கு பெற்றனர்” என்றார்.
ஒவ்வொரு திரைப்படத்திலும் தனித்துவமான பின்னணி இசையை, இசை ரசிகர்களுக்கு வழங்கி வரும் சாம் சிஎஸ் மேலும் கூறும்போது, “NOTA பின்னணி இசை மிக பிரமாண்டமாக இருக்கும். நான் சாதாரணமாக சொல்லவில்லை, படத்தில் உள்ள காட்சிகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன, அதனால் அவற்றிற்கு பொறுத்தமான இசையை வழங்க, நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது” என்றார்.
முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா பற்றி கூறும்போது, “கதை மற்றும் காட்சிகள் என்னை இன்னும் சிறப்பாக வேலை செய்ய உந்திய அதே நேரத்தில், விஜய் தேவரகொண்டாவின் திரை ஆளுமை என்னை இன்னும் அடுத்த கட்டத்துக்கு தள்ளியது. மேலும், NOTA ஒரு தான் அவரின் காதல் நாயகன் என்ற முத்திரையை உடைத்து, நெருக்கமான, யதார்த்தமான கதாபாத்திரத்தில் அவரை முன்னிறுத்தியிருக்கும் முதல் படம். இது ஒரு இருமொழி திரைப்படமாக இருப்பதால், இரண்டு மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் இசையமைக்க வேண்டியிருந்தது. அதை செய்திருக்கிறேன் என நம்புகிறேன்” என்றார்.
விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன் பிர்ஸாடா, எம் எஸ் பாஸ்கர், பிரியதர்ஷி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த ‘NOTA’ படத்துக்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘அருவி’ புகழ் ரேமண்ட் டெரிக் கிராஸ்டா படத்தொகுப்பாளராகவும், டிஆர்கே கிரண் மற்றும் எஸ் எஸ் மூர்த்தி ஆகியோர் கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.





