
Dhev Cinemas Pvt. Ltd. நிறுவனத்தின் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி S. மற்றும் தங்கப்பாண்டி D. தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம், வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை படக்குழுவினர் புதிய போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
யோகி பாபுவின் 300-வது திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இப்படம், ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்கும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட டீசரும் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
ஒரு நடுத்தர வர்க்க இளைஞன் தனது வாழ்க்கையில் முன்னேறுவதற்காக கடுமையாக உழைத்து ஒரு வாகனத்தை வாங்குகிறார். ஆனால், அந்த வாகனம் திருடப்பட்ட பிறகு, அதற்கு பலர் உரிமை கோரும் சூழ்நிலை உருவாகிறது. வாகனத் திருட்டு மாஃபியாவை மையமாகக் கொண்டு, நகைச்சுவை, உணர்வு மற்றும் விறுவிறுப்பான கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது.
‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா. ராஜ்மோகன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
யோகி பாபு, இதுவரை நடித்திராத வகையில், யதார்த்தமும் உணர்வும் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகியாக அனாமிகா மஹி அறிமுகமாகிறார்.
மேலும் காளி வெங்கட், அருள்தாஸ், மதன் தட்சணாமூர்த்தி (அயலி), சுப்ரமணியம் சிவா, மைனா நந்தினி, எம். சௌந்தர்யா சரவணன், சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, பவா லட்சுமண், ரஞ்சன் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குநர் லெனின் பாரதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை பிரதீப் காளிராஜா, படத்தொகுப்பை மு. காசி விஸ்வநாதன், கலை இயக்கத்தை பி. சேகர், சண்டைக் காட்சிகளை ஓம் பிரகாஷ் ஆகியோர் கவனித்துள்ளனர்.
படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.





