
நாட்டில் குடிநீர் பஞ்சம் இருப்பதாக ஊடகங்கள் பொய் சொல்கின்றன என மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர ஷேக்வாத் நேற்று தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை குறித்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர ஷேக்வாத் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, உத்திரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள அணைகளில் போதுமான தண்ணீர் இருப்பதாகவும், நாட்டில் தண்ணீர் பஞ்சம் குறித்த பயத்தை ஊடகத்தினர்கள் தான் உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 18-ம் தேதி மத்திய நீர் ஆணையம் வறட்சி தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள மக்கள் தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்தவும் அறிவுறுத்தியது.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்க்ப்பட்டிருந்தது. ஆனால் நாட்டில் தண்ணீர் பஞ்சமே இல்லை என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது





