Spotlightசினிமாதமிழ்நாடு

திருக்குறள் பாமர மக்களைச் சென்றடையவில்லை: நடிகர் சிவகுமார் பேச்சு!!

திருக்குறள் சாதாரண பாமர மக்களைச் சென்றடையவில்லை என்று ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசினார்.இதுபற்றிய விவரம் வருமாறு:

தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் தமிழ் இலக்கிய முயற்சிகளை ஊக்கமூட்டுவதற்கும் கனடாவில் இயங்கிவரும் கனடா ‘தமிழ் இலக்கியத் தோட்டம் ‘அமைப்பு பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது.
தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் தமிழ்த்தொண்டு புரிபவர்களுக்கும் இயல் விருது உள்ளிட்ட பல விருதுகளை வழங்கிக் கொளரவித்து வருகிறது.

நேற்று கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பில் விருது வழங்கும் விழா இணையவழியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

அவர் சிறப்புரையாற்றும் போது ,

“கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இங்கே விருது விழாவிற்கு கொடையாளர்கள் அதிகம் நிதி உதவி செய்தால் நிறைய பேருக்கு விருதுகள் வழங்கலாம் என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு என் மூலமாக ஒரு கணிசமான தொகை வழங்க நான் ஏற்பாடு செய்கிறேன்.மேலும் பலருக்கு விருதுகள் வழங்க வேண்டும்” என்றும் ஆரம்பத்திலேயே அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் மேலும் பேசும் போது,

தான் எழுதிக் கொண்டிருக்கும் திருக்குறள் கதைகள் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

“என்னுடைய திருக்குறள் கதைகள் பற்றி இங்கே அறிமுகம் செய்தார்கள் .பாமர மனிதனுக்குத் திருக்குறள் போய்ச் சேரவில்லை என்பது தான் என்னுடைய அபிப்பிராயம்.திருக்குறளுக்கு எவ்வளவோ பேர் உரை எழுதி இருக்கிறார்கள்.

மணக்குடவர், பரிதி,பரிமேலழகர் போன்று நிறையபேர் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, 1000 ஆண்டுகளுக்கு முன்பு என பல பேர் உரை எழுதியிருக்கிறார்கள்.திருக்குறளுக்கு டாக்டர் மு. வ அவர்கள் எழுதிய உரை ஆறு லட்சம் புத்தகங்கள் விற்றதாகச் சொல்கிறார்கள்.திருக்குறளுக்கு கலைஞர் அவர்கள். சாலமன் பாப்பையா போன்று நிறைய பேர் உரைகள் எழுதிவிட்டார்கள்.

எவ்வளவு பேர் எழுதினாலும் புத்தகங்கள் அலங்காரமாக அலமாரிகளில் உள்ளன. திருக்குறள் பாமர எளிய மக்களைப் போய்ச் சேரவில்லை.

அவர்களுக்குப் போய் சேரும் வகையில் நான் ஒரு முயற்சி செய்கிறேன்.
நான் சொல்வது என்னவென்றால்
வணங்கத்தக்க அரசியல் தலைவர்கள், கலை உலகத்தில் சாதனை படைத்தவர்கள்,தனிமனித வாழ்க்கையில் மேன்மையாக வாழ்ந்தவர்களின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டு அதிலிருந்து சம்பவங்களைத் தொகுத்து ஒன்றரை நிமிடங்களுக்குள் சொல்லக்கூடிய ஒரு கதையாகக் கூறி அதற்கு பொருந்துகிற மாதிரி திருக்குறளை எடுத்துக் கொண்டு நூறு கதைகள் சொல்லி இருக்கிறேன்”என்றவர் உதாரணமாக அதிலிருந்து ஐந்து கதைகள் எடுத்துக் கூறினார்.

காமராஜர், லால் பகதூர் சாஸ்திரி, சிவாஜி கணேசன் , இன்ஸ்பயரிங் இளங்கோ உள்ளிட்ட ஐந்து பேர் வாழ்க்கையைப் பற்றி எடுத்துக் கூறி அதற்கான திருக்குறளையும் கூறினார்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் விருது விழாவில் படைப்பாளிகளுக்கான பிரிவில் கவிதைக்கு பெருந்தேவி, புனைவுக்கு பா. கண்மணி, இலக்கிய சாதனைக்கு பி.ஜே.திலீப்குமார்,பிறமொழி இலக்கியத்துக்கு லோகதாசன் தர்மதுரை,தமிழ்த் தொண்டுக்கு வீரகத்தி சுதர்சன் ஆகிய ஐந்து பேர் விருது பெற்றனர்.விருதாளர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்கள்.

கவிஞர் ரவி சுப்ரமணியன் நவீன கவிதைக்கு இசை எதற்கு? என்ற தலைப்பில் பேசினார்.

இவ்விருது விழாவில் மானுவேல் ஜேசுதாசன் , எழுத்தாளர் அ .முத்துலிங்கம் உள்ளிட்ட கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் பொறுப்பாளர்கள் ,மற்றும் பல நாடுகளிலிருந்து இலக்கிய வாசகர்கள் கலந்து கொண்டனர்.

Facebook Comments

Related Articles

Back to top button