
கடலூர் மாவட்டத்தில் உள்ளது எம்.பட்டிக்குடிகாடு என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் அழகேசன். இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்.
கடந்த சனிக்கிழமை அழகேசன் கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு, பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வேறு சமூகத்தை சேர்ந்த சத்யராஜ், கோபி, பழனிச்சாமி, வெங்கடேசன் ஆகிய 4 பேரும் வழி மறித்தனர். “எவ்ளோ தைரியம் இருந்தால், எங்க முன்னாடி கூலிங் கிளாஸ் போடுவே.. கழட்டு அதை.. முதல்ல பைக்கில் இருந்து கீழே இறங்கு.. எங்க முன்னாடி வண்டி ஓட்டக்கூடாது.. தள்ளிட்டுதான் போகணும்” என்று சொல்லி, அவரை தாக்கியும் உள்ளனர்.
மேலும் அழகேசனின் தாய் அன்னக்கிளியையும் அந்த 4 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தாய்-மகன் இருவருமே படுகாயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தோர் தாய் – மகன் இருவரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இந்நிலையில் அழகேசன் போலீசில் புகார் அளிக்கவும், அதன்பேரில் விசாரணை நடந்துள்ளது.
ஆனால் பெயரளவுக்கு விசாரணை நடத்தப்பட்டதாக கூறி, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆத்திரமடைந்து, 20க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் முற்றுகையிட்டு, தங்கள் கோரிக்கையையும் கலெக்டரிடம் தந்தனர். இதையடுத்து, கலெக்டர் அன்புசெல்வன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். அதன்படியே தாக்குதல் 4 பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள கோபியை தேடி வருகிறார்கள்.





