Spotlightவிளையாட்டு

டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சிஎஸ்கே!

ஐபிஎல் தொடரின் 30-வது போட்டியில் சென்னையும் டெல்லியும் மோதின. இதில் சென்னை அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது.

தொடர்க்க வீரர்களாக களமிறங்கினர் ஷேன் வாட்சன் மற்றும் டூ பிளஸ்ஸிஸ். இதில் வாட்சன் சிக்சர்கள், பவுண்டரிகளாக விளாசி சி.எஸ்.கே ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டினார். சுரேஷ் ரெய்னா வந்த வேகத்திலேயே 1 ரன்னில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து ஷேன் வாட்சன் 78 ரன்களில் அவுட்டானார். அவர் 4 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து தோனி – ராயுடு இணை டெல்லி அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தது. இருவருமே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சி.எஸ்.கே கேப்டன் தோனி தனது விஸ்வரூப ஆட்டத்தை வெளிக்கொணர்ந்தார். சென்னை அணியின் இன்னிங்ஸின் கடைசி பந்தில் தோனி 2 ரன்கள் எடுத்து அரைசதத்தை கடந்தார். அதற்கு முந்தைய பந்தில் ராயுடு 41 ரன்னில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்களைக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி டெல்லி டேர்டெவில்ஸ் அணி பேட்டிங் செய்யக் களமிறங்கியது.

அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 79 ரன்களும், விஜய் ஷங்கர் 54 ரன்களும், காலின் முன்ரோ 26 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் சி.எஸ்.கே அணி 12 புள்ளிகளுடன் அணிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button