
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பலரும் வென்றாகவேண்டிய கட்டாயத்தில் பம்பரமாக சுழன்று தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், சில தினங்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் சேப்பாக்கம் தொகுதி வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுவதாக அவரே அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் பிறந்தநாளான நேற்று வி கே சசிகலாவை சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்.
இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. திராவிட கட்சிகளை தமிழகத்தில் ஒழித்தாக வேண்டும் என்று பேசி வந்த சீமான், தற்போது சசிகலாவை சந்தித்தது அவரது தம்பிகள் பலருக்கே வெறுப்பை கக்க வைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், தற்போது திமுக தான் எங்கள் எதிரி அதிமுக அல்ல எனவும் சீமான் கூறி வருகிறார்.
இந்நிலையில், சேப்பாக்கம் தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மன்சூர் அலிகான், இன்று புதிதாக கட்சி ஒன்றை அறிவிக்கவுள்ளார்.
சீமான் – சசிகலா சந்திப்பின் எதிரொலியாக மன்சூர் அலிகான் புதிதாக கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





