
இயக்கம்: பா விஜய்
நடிகர்கள்: அர்ஜூன், ஜீவா, ராஷி கண்ணா, எட்வர்ட், ரோகிணி, சார்லி,
ஒளிப்பதிவு: தீபக் குமார் பதி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பு: வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல்
கதைப்படி,
ஆர்ட் டைரக்டராக ஆக வேண்டி, தன் சொந்த பணத்தை செலவு செய்து ஒரு மிகப்பெரும் அரண்மனை போன்ற செட் ஒன்றை படத்திற்காக தயார் செய்கிறார். ஆனால், அப்படமோ ஆரம்பிப்பதற்குள் நின்றுவிட, என்ன செய்வதென்று முடியாமல் திகைத்து நிற்கிறார் ஜீவா.
அதே அரண்மனை செட்டினை “scare house” ஆக மாற்றுகிறார். பொதுமக்களை டிக்கெட் வாங்கி உள்ளே அனுமதித்து அந்த திகில் அனுபவத்தை அவர்களுக்குக் கொடுக்கிறார். ஜீவாவும் ராஷி கண்ணாவும் காதலர்கள். இவர்கள் இருவரும் தங்களது நண்பர்கள் மூலமாக இதை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த அரண்மனை செட்டிற்குள் அமானுஷ்யம் உலவ, உள்ளே சென்ற ஜோடி ஒன்றில் காதலன் ஒருவர் மாயமாகி விட, பொதுமக்கள் அந்த இடத்திற்கு செல்ல வேண்டாம் என்று போலீஸார் கூறிவிடுகின்றனர்.
இதனால், சோகத்தில் மூழ்கி விடுகிறார் ஜீவா. மேலும், வீட்டில் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும் தனது அம்மா ரோகிணியை நினைத்தும் கவலையடைகிறார் ஜீவா.
இந்த சமயத்தில், அரண்மனை செட்டிற்கு கீழே ஒரு சுரங்கம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார். அங்கு சென்று பார்க்கையில் அதிர்ச்சிகரமான பல விஷயங்கள் நடைபெறுகிறது. அங்கு கிடைக்கும் பழைய வீடியோ ரீலை திரையிட்டு பார்க்கும் போது வியப்படைகிறார் ஜீவா.
1940 களுக்கு கதை நகர்கிறது. அங்கு அர்ஜூன் யார்.? அவர் என்ன செய்து கொண்டிருந்தார்.?? அவருக்கும் இந்த அரண்மனைக்கும் உள்ள தொடர்பு என்ன.?? தனது தாயின் உயிரை ஜீவா காப்பாற்றினாரா.?? சித்த மருத்துவத்தின் மகிமையை எப்படியெல்லாம் திரைப்படுத்தியிருக்கிறார்கள்..?? என்பதற்கெல்லாம் விடையாக இரண்டாம் பாதியை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா விஜய்.
நாயகனாக ஜீவா முதலில் ஆரம்பித்தாலும், கதை நகர நகர நடிகர் அர்ஜூன் படத்தின் கதையை தனது தோளில் தூக்கி வைத்து சுமக்கத் துவங்குகிறார்.
மற்ற படங்களில் கொடுத்த நடிப்பையே இப்படத்திலும் கொடுத்திருக்கிறார் ஜீவா. இப்படத்திற்கென தனியான மெனக்கெடல் எதுவும் பெரிதாக கொடுக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.
அர்ஜூன் தனது கேரக்டரின் வலுவை நன்றாக புரிந்து கொண்டு அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து சென்றுவிட்டார். இவருக்கும் ஜாக்லினாக நடித்தவருக்குமான காதல் கெமிஸ்ட்ரி சிறிதளவு வொர்க் அவுட் ஆகியுள்ளது. மூலக்கதையை அர்ஜூன் சுமந்து சென்றதால், இவரே கதையின் நாயகனாக படத்தில் தெரிகிறார்.
ராஷிகண்ணாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும்படியான கதாபாத்திரம் படத்தில் பெரிதாக இல்லை.
பல படங்களில் பார்த்த ஒரு கதையை தான் கையில் எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர் பா விஜய். சித்த மருத்துவத்தை குறித்து இதுவரை வெளிவந்த பல படங்களின் வரிசையில் இதுவும் ஒரு படம் என்று தான் இப்படத்தை காண முடிந்தது. இதில், அமானுஷ்யம் என்ற ஒன்றை புதிதாக இணைத்திருக்கிறார்கள். கதையின் சாராம்சமான தமிழனின் சித்த மருத்துவ பெருமையை உலகறிய செய்ய இயக்குனர் பா விஜய் எடுத்த முயற்சியை வெகுவாகவே பாராட்டலாம்.
வில்லனாக நடித்த எட்வர்ட், அப்பாவாக நடித்த சார்லி, அம்மாவாக நடித்த ரோகிணி உள்ளிட்ட நட்சத்திரங்களும் படத்தில் பெரிதாகவே தங்களது கேரக்டர்களை பலமாக செய்திருக்கின்றனர்.
ரெடின் கிங்க்ஸ்லிக்கு பதிலாக வேறொருவரை அக்கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கலாம்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்களுக்கென பெரிதான ஒரு முயற்சியை இப்படத்தில் அவர் கொடுக்கவில்லை. பின்னணி இசையில் மட்டுமே தனக்கான யுனிக்கை ஒரு சில இடங்களில் மட்டுமே கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
வி எப் எக்ஸ் மற்றும் சிஜி பணிகள் ரசிக்கும்படியாக இருந்தது. பயமுறுத்தும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர்களின் வேலைப்பாடு சற்று ரசிக்க வைத்தது.
ராதாரவி பேசும் அரசியல் வசனங்கள் கைதட்டும்படியாக இருந்தது. பெரிதான வேலைப்பாடு, பெரிதான உழைப்பு என அனைத்தையும் பிரமாண்டமாகவே கொடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.
ஒரு சில காட்சிகளை தவிர்த்து படத்தின் மூலக் கதைக்குள் இன்னும் சற்று அதிகமாகவே பயணப்பட்டிருக்கலாம். அதை இன்னும் அதிகமாகவே காட்சிப்படுத்தியிருக்கலாம்.
க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி ரசிக்கும்படியாக காட்சிப்படுத்தியிருந்தனர்.
மொத்தத்தில்,
அகத்தியா – நிறை இருந்தும் குறைகள் தென்படுகின்றன…





