
நவீன் குமார் பழனிவேல் அவர்களின் இயக்கத்தில் சமுத்திரகனி, ஷிவதா, ராஜ் திரண்டார் மூணார் ரமேஷ், சுந்தர் பாண்டியன், பிரேம், கொற்றவை, விசாகன், புலிப்பாண்டி இவர்களின் நடிப்பில் உருவாகி வெளிவரவிற்கும் இணைய தொடர் தான் ”தடயம்”.
இந்த தொடரை அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கிறார். ஜீ5 தமிழில் இந்த தொடர் வெளியாக இருக்கிறது.
கதைக்குள் பயணித்து விடலாம்…
தமிழகம்-ஆந்திரா எல்லையோர பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது. கதை 1999 ஆம் ஆண்டு பயணப்படுகிறது.
அங்கு ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் எஸ் ஐ’ஆக பணிபுரிந்து வருகிறார் சமுத்திரக்கனி. அதே காவல் நிலையத்திற்கு புதிதாக பொறுப்பேற்று இன்ஸ்பெக்டராக வருகிறார் ஷிவதா. சமுத்திரக்கனியை பற்றி பல பொய் செய்திகளை ஷிவதாவிடம் சக காவலர்கள் சிலர் கூற, அதனை நம்புகிறார் ஷிவதா.
ஒரு கட்டத்திற்கு மேல் சமுத்திரகனி தடயியல் நிபுணராகவும் அதில் கைதேர்ந்தவராக இருப்பதை அறிந்து கொள்கிறார் சிவாதா.
இந்நிலையில் அந்த காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு கொலைகள் அடுத்தடுத்து நடக்கின்றன. மிகவும் கொடூரமாக நடக்கும் அந்த கொலையை பற்றி விசாரிக்க ஷிவதா செல்கிறார். கொலை பற்றி விசாரிக்க உயர் அதிகாரிகள் குழு ஒன்று அமைக்கிறார்கள். அந்த குழுவில் சமுத்திரகனியையும் இணைத்துக் கொள்கிறார் ஷிவதா.
சமுத்திரக்கனி அந்த கொலையை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். வழக்கானது 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தின் தொடர்ச்சி தான் இது என்பதை அறிந்து கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல் ஆந்திராவில் நடைபெற்ற கொலையோடு சேர்த்து சுமார் 60க்கும் மேற்பட்ட கொலைகள் இந்த கொலையாளிகள் செய்திருக்கின்றனர் என்பதையும் கண்டறிகிறார் சமுத்திரகனி.
ஒரு கட்டத்தில் இந்த கொலைகளை செய்தது இரண்டு பேர் என்பதை கண்டுபிடிக்கின்றனர் சமுத்திரக்கனியும் ஷிவதாவும். அந்த இரண்டு பேர் யார்.? எதற்காக இந்த கொலைகளை செய்கின்றனர்.? என்பதற்கான விடை அடுத்தடுத்த தொடரில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் நவீன் குமார்.
அதியமான் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் சமுத்திரகனி. எந்த ஒரு கம்பீரமும் இல்லாமல் கூர்மையான புத்தியைக் கொண்டு கொலை விசாரணையை விசாரிக்கும் இவரது நடிப்பானது கதைக்கு மிகவும் பலமாக அமைந்திருக்கிறது.
இவர் ஒரு பக்கம் ஸ்கோர் செய்திருக்க மற்றொரு பக்கம் ஷிவதா, தனது பங்கிற்கு அழகோடு சேர்த்து நடிப்பையும் மிக கச்சிதமாக கொடுத்திருக்கிறார். எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் தனது கதாபாத்திரத்தை உள்வாங்கிக் கொண்டு அதனோடு பயணித்திருக்கிறார் ஷிவதா.
உண்மை சம்பவங்களை மையப்படுத்தியே இக்கதை நகர்வதால் அதனை மிகவும் கவனமாக கையாண்டு அதனோடு பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் நவீன் குமார்
வில்லனாக வரும் ராஜ் தனது உடல் மொழி மற்றும் முகபாவனை வைத்துக்கொண்டு தொடர் பார்க்கும் அனைவரையும் பயமுறுத்தியிருக்கிறார். புஷ்பா படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த ராஜ், இதிலும் மிரட்டலான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார்..
ராஜ் அவரின் தம்பியாக நடித்த பிரேம் அவர்களும் தனது கதாபாத்திரத்திலே வாழ்ந்திருக்கிறார். மேலும், தொடரில் நடித்த மூணார் ரமேஷ், சுந்தரபாண்டியன் மற்ற அனைவருமே மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். சமுத்திரகனியோடு கூடவே இணைந்து நடித்த புலிபாண்டியன் தனது கதாபாத்திரத்திற்கு எந்த ஒரு குறையும் வைக்காமல் நடித்து முடித்து இருக்கிறார். குறிப்பாக இருவருக்குமான கான்வர்சேஷன் படத்தில் பெரிதாகவே ரசிக்கும்படியாக இருந்தது.
சிறு சிறு குறைகள் எட்டிப் பார்த்தாலும் பெரிதான எந்த ஒரு குறையும் சொல்ல முடியாத அளவிற்கு தடயம் அனைவரையும் வெகுவாகவே கவரும்.
பின்னணி இசை தொடருக்கு மிகப்பெரும் பலம். சரியான வெளிச்சத்தை கொடுத்து தனது கேமராவில் படம் பிடித்து அதை அழகாக படைத்ததில் ஒளிப்பதிவாளரின் பங்கு அளப்பரியது.





