
நடிகர்கள்: டீஜய் அருணாசலம் ஜனனி, மந்த்ரா, ஆதித்யா கதிர், தங்கதுரை, கிரேன் மனோகர், செந்தில் குமாரி, பாவல் நவநீதன் மெல்வின் ஜெயப்பிரகாஷ்
எழுத்து & இயக்கம்: நவீன் டி கோபால்
ஒளிப்பதிவு : மார்க்கி சாய்
இசை: கிரண் ஜோஸ்
தயாரிப்பு: ஸ்ரீ கிருஷ்ணா ப்ரொடக்ஷன்ஸ் மவுலி எம் ராதாகிருஷ்ணா
சித்தூர் தான் படத்தின் கதைக்களம். ஊரில் அப்பா அம்மாவிற்கு ஒரே மகனாக இருக்கிறார் டீஜய். தனது மகன் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்திருக்கின்றனர் இருவரும்.
நேரத்திற்கு வேலைக்குச் செல்வது, நண்பர்களோடு ஊர் சுற்றுவது என இவரது வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், அதே ஏரியாவில் வந்து குடியேறுகிறார் நாயகி ஜனனி.
மந்த்ராவின் மகளாக வரும் ஜனனி, தான் உண்டு தனது வேலை உண்டு என்று சென்று கொண்டிருக்கிறார். தனது மகளை யாராவது பார்த்தால், அவரை அறைந்து விடும் அளவிற்கு கடும் கோபம் கொண்டவர் மந்த்ரா.
தனது நண்பனிடம் இட்ட சவாலுக்காக ஜனனியை காதலிக்க ஆரம்பிக்கிறார் டீஜய். ஒருதலை காதலாக சென்று கொண்டிருக்கும் வேலையில், இவரது காதல் மந்த்ராவிற்கு தெரிய வருகிறது.
அதன்பிறகு கதை வேறுபக்கம் பயணப்பட்டு வேகம் எடுக்கிறது. இறுதியில் இவர்களின் காதல் ஒன்று கூடியதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் டீஜய், கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ஆங்காங்கே காட்சிகளை நன்றாக கையாண்டிருந்தாலும், ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கை கொடுத்திருந்தது நன்றாகவே தெரிந்தது. அதில் சற்று கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.
அழகிலும் நடிப்பிலும் நன்றாகவே ஜொலித்திருக்கிறார் ஜனனி. முன்னொரு காலத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய மந்த்ரா இப்படத்தில் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஆதித்யா கதிர் மற்றும் தங்கதுரை இருவரின் காமெடி சரவெடிகள் ஆங்காங்கே வெடித்திருக்கின்றன.
டீஜய்யின் அப்பா அம்மாவாக நடித்த கிரேன் மனோகர் மற்றும் செந்தில் குமாரி இருவருமே நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
நல்லதொரு காதல் கதையை எடுத்தாலும், அதை இன்னும் சுறுசுறுப்பாகவும் அழகாகவும் கொடுத்திருந்திருக்கலாம். அதை கொடுக்க இயக்குனர் சற்று தடுமாறியிருக்கிறார். முதல் பாதி முழுவதுமே, கதை ஆரம்பித்த இடத்திலேயே நின்றது சற்று போர் தான். ஜனனியில் காதல் காட்சியை சற்று கவனமாக கையாண்டிருக்கலாம்.
க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சி மட்டுமே படத்தினை தூக்கி நிறுத்தியிருக்கிறது. கடைசி பத்து நிமிட காட்சிக்காக படம் முழுவதும் பொறுமையாக இருக்க வேண்டிய சூழலாகிறது.
பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே சற்று கைகொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவு சித்தூர் பகுதியினை வெளிச்சமாக காட்டியிருக்கிறது.
உசுரே – காதல்





