
சீனாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது ‘கொரோனா வைரஸ்’. இதன் பாதிப்பால் பலரும் மரணமடைந்து வருகின்றனர். உலக நாடுகளையே இந்த வைரஸ் அதிர வைத்துள்ளது.
இந்த வைரசை கட்டுப்படுத்தும் மருந்துகள் இன்றி மருத்துவர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை குணப்படுத்தும் மருந்து கலவையை கண்டறிந்து உள்ளதாக தாய்லாந்து சுகாதார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சீனாவில் இருந்து தாய்லாந்து திரும்பிய 19 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி காணப்பட்டது. இவர்களுக்கு தனி வார்டில் பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் வுகானில் இருந்து தாய்லாந்து திரும்பிய 71 வயது மூதாட்டியும் ஒருவராவார்.
அவருக்கு 48 மணி நேரம் அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையின் மூலமாக அவர், முழுவதுமாக குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் பாதித்த 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
ப்ளு காய்ச்சல் மற்றும் ஹெச்ஐவி நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகளை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கொடுத்து கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்தி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தின் இந்த அறிவிப்பு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.




