
காதல் என்றால் என்ன என்ற உணர்வு சிலரிடம் அதிகமாகவே தோன்றிக் கொண்டிருக்கும்., ஆனால், அப்படியான உணர்வை பார்க்காமல் அதன் மகிழ்ச்சியை எட்ட முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. அப்படியாக ஒரு உண்மைச் சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
சென்னை கோவிலம்பாக்கம் எஸ் கொளத்தூர் பொன்னி அம்மன் நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். 22 வயதான இவர், ஏ.சி. மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவர் கோவிலம்பாக்கம் சத்யா நகர் 6-வது தெருவைச் சேர்ந்த 22 வயதான திவ்யா என்ற பெண்ணை, கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது. மணிகண்டன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் இரவில் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார் என கூறப்படுகிறது. குடிப்பழக்கத்தை விடும்படி பெற்றோர் கூறியதால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 29-ம் தேதி இரவு மணிகண்டன் வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் வீட்டுக்குள் அனுமதிக்காமல் கதவை மூடி உள்ளனர். இதையடுத்து மணிகண்டன் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கியுள்ளார். தினமும் ஏன் இப்படி குடித்து விட்டு வீட்டுக்கு வருகிறாய் என பெற்றோர் கேட்டு, குடிப்பழக்கத்தை விட்டு விடு என கூறியதாகத் தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த மணிகண்டன் மண்ணெண்ணையை எடுத்து பெற்றோர் கண்முன்னே தலையில் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.
இதைப் பார்த்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். இன்று சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார். தினமும் மருத்துவமனைக்கு சென்று, காதலன் மணிகண்டனை சந்தித்துவிட்டு வந்த திவ்யா காதலன் இறந்த தகவல் அறிந்து மனமுடைந்தார். பின்னர் வீட்டுக்கு வந்த திவ்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இரு சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





