
நடிகர்கள்: கார்த்தீஸ்வரன், ஸ்ரீநிதி, ஆதவன், லிவிங்ஸ்டன், ப்ளாக் பாண்டி, மிருதுளா சுரேஷ், அகல்யா வெங்கடேசன்,
கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்: எஸ் கார்த்தீஸ்வரன்
இசை: ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு: என் எஸ் ராஜேஷ்
தயாரிப்பாளர்: ராதாகிருஷ்ணன்
கதைப்படி,
கார்த்தீஸ்வரன், ஆதவன், அகல்யா உள்ளிட்ட சிலர் ஆன்லைனில் மோசடி செய்து பணம் பறிக்கும் கும்பலாக செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், பணத்திற்கு அதிகமாக வட்டி தருவது என கூறி சீட் கம்பெனி நடத்துவது, 250 ரூபாய்க்கு மொபைல் என பல மோசடியில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றி பல ஆயிரக்கணக்கான கோடியை சுருட்டிக் கொண்டு சுற்றித் திரிகிறது இந்த கும்பல்.
இந்த கும்பலிடம் பல லட்சங்களை பறி கொடுத்த குடும்பஸ்தன் லிவிங்ஸ்டன், துக்கம் தாளாமல் இறந்துவிடுகிறார். இப்படியாக பல குடும்பங்களை இந்த கும்பல் மோசடி செய்கிறது. இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டராக வரும் ஸ்ரீநிதி.
பல வேடங்களில் சென்று கார்த்தீஸ்வரன் மக்களை மோசடி செய்ததால் அவரை பிடிக்க தில்லாடுகிறார் ஸ்ரீநிதி.
இறுதியில் ஸ்ரீநிதியின் கையில் கார்த்தீஸ்வரன் சிக்கினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
கதைக்கேற்ற நாயகனாக படத்தில் தனது கேரக்டரை நன்றாகவே செய்து முடித்திருக்கிறார் கார்த்தீஸ்வரன். கே என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது கேரக்டரை அளவாகவே கொடுத்திருக்கிறார். சதுரங்க வேட்டை படத்தில் வரும் நாயகன் நட்டி போன்றே தனது இயல்பான நடிப்பால் அனைவரையுமே கவர்கிறார். படத்தின் கதையும் சதுரங்க வேட்டை படத்தின் தொடர்ச்சியாகவே தெரிகிறது.
போலீஸ் வேடத்தில் நாயகி ஸ்ரீநிதி மிடுக்காக தனது கதாபாத்திரத்தில் காட்சியளித்திருக்கிறார். சீசனுக்கு வந்தது போல் லிவிங்ஸ்டன், ப்ளாக் பாண்டி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் வந்த இடம் தெரியாமல் உடனே சென்று விடுகின்றனர்.
ஆதவனின் காமெடி சற்று ரசிக்க வைத்தது.
இது எல்லாம் செய்தால் இப்படி தான் நடக்கும் என்று முடிப்பது வேறு, இதெல்லாம் செய்தால் இப்படியெல்லாம் தப்பித்து சுகமாக வாழலாம் என்று முடிப்பதென்பது வேறு.. நாம் மக்களிடத்தில் படத்தின் வாயிலாக ஒரு விழிப்புணர்வை கொடுத்திருக்கலாம் அதில் எந்த தவறுமில்லை. ஆனால், இப்படியெல்லாம் மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் இப்படி ஒரு முடிவு தான் எட்டக்கூடும் என்பதையும் காண்பித்திருக்கலாம்.
ஸ்ரீகாந்த் தேவானின் இசையில் பாடல்கள் ரசிக்க வைத்தது. பின்னணி இசையும் அடி தூள் தான்.
ஒளிப்பதிவு வெளிச்சம் ஏற்றி கொடுத்திருக்கிறது. லடாக் பகுதியில் எடுக்கப்பட்ட பாடல் நன்றாக இருந்தது.
நிர்வாகம் பொறுப்பல்ல – அந்த படத்தோட கண்டினியூட்டி தான் என்று மக்கள் நினைத்தால் நாங்கள் பொறுப்பல்ல…




