Spotlightசினிமாவிமர்சனங்கள்

விட்னஸ் – விமர்சனம் 3.5/5

தீபக் இயக்கத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரோகிணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “விட்னஸ்”. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகளும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும் பற்றி எடுக்கப்பட்ட படைப்பே இந்த “விட்னஸ்”..

கதைப்படி,

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக குப்பை அள்ளும் தொழில் செய்து வருகிறார் ரோகிணி. இவருக்கென்று உலகமாக இருக்கிறார் இவரது மகன் பார்த்திபன். அப்பாவை இழந்துவிட்டதால் தாயே உலகமென பார்த்திபனும் தனது தாயின் மீது பாசமாக இருக்கிறார்.

நீச்சல் போட்டியில் திறமையானவனாக இருக்கிறார் பார்த்திபன். இந்நிலையில், இரவு வேலைக்குச் சென்று வீட்டில் வந்து பார்க்கும் போது பார்த்திபன் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைகிறார் ரோகிணி.

அதன்பிறகு தான் தெரியவருகிறது, அப்பார்ட்மெண்ட் ஒன்றின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கும்போது மூச்சுத் திணறி பார்த்திபன் இறந்துவிட்டான் என்று… இதனால் உறைந்து போகிறார் ரோகிணி..

தனது மகனுக்கு நடந்தது போல் இனி எவர்க்கும் நடக்கக் கூடாது என்று பெத்தராஜூ என்ற தொழிற்சங்கத் தலைவரோடு சேர்ந்து நீதிமன்றத்தின் படியேறுகிறார். பார்த்திபனை அந்த பணிக்கு நிர்ப்பந்தித்த நபர், அப்பார்ட்மெண்ட் நிர்வாக தலைவர், ஒப்பந்தகாரர், மாநகராட்சி பொறியியலாளர், என இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனைப் பெற்றுத் தர போராடுகிறார் ரோகிணி.

இவருக்கு துணையாக பார்த்திபனின் தோழியான ஸ்ரதா ஸ்ரீநாத்தும் ரோகிணியின் பக்கம் நிற்கிறார்.

இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

தனது கதாபாத்திரத்திற்கு என்ன உயிர் கொடுக்க வேண்டும் அதை கொடுத்து அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் ரோகிணி. இக்கதாபாத்திரத்தில் இவரைத் தவிர வேறு யாரையும் யோசித்துக் கூட பார்க்க முடியாது.

தனது மகனுக்காக பட்ட இன்னல்களும், மகனை இழந்து தாய் வாடும் துக்கத்தையும் கண்முன்னே நிறுத்தி நம்மையும் கதையோடு இழுத்துச் சென்றதில் ரோகிணியின் பங்கு அலப்பறியது.

இந்த வழக்கின் முக்கியமான திருப்புமுனையாகவும் வந்து நிற்கிறார் ஸ்ரதா. இவர் எடுத்துக் கொண்டும் வரும் எவிடென்ஸே இக்கதையின் உயிராக வந்து நிற்கிறது. தனக்குக் கொடுக்கப்பட்டதை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் ஸ்ரதா.

தொடர்ச்சியாக படத்தில் நடித்த சண்முக ராஜா, அழகம் பெருமாள், ஸ்ரீநாத் என சீனியர்கள் தங்களது கேரக்டர்களை சிறப்பாக செய்து முடித்திருக்கின்றனர்.

நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருக்கும் தொழிலாளர்களின் இன்னல்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர் தீபக்.

அதிகார வர்க்கத்தின் போக்கினை எவ்வித சமரசமுமின்றி வெளிக்காட்டியதற்காகவே இயக்குனருக்கு ஆகப்பெரும் வாழ்த்துகள்.
/
“இந்நார் தான் இந்த தொழிலை செய்ய வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் ஒன்று இங்கு இருக்கு” என்ற வசனத்தை வைத்து இயக்குனர் கைதட்டல் வாங்குகிறார்.

மலக்கழிவை அகற்ற தொட்டிக்குள் இறங்கி பல நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய பிறகும் மீண்டும் அதே முறை இன்னமும் இருப்பது… சாபக்கேடான ஒன்று தான்.

அதிலும், இப்படத்தில் வரும் க்ளைமாக்ஸ் காட்சிக்காகவே இயக்குனருக்கு எழுந்து நின்று கைதட்டலாம்… யாரும் யூகிக்க முடியாத ஒன்றை வைத்து படத்தினை முடித்திருக்கிறார் இயக்குனர் தீபக்.

ஒரு சில கதாபாத்திரங்களின் போக்கு மூலக்கதையோடு ஓட்டவில்லை என்றாலும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

இயக்குனரே ஒளிப்பதிவையும் கையாண்டு, காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார். ரமேஷ் தமிழ் மணியின் இசை நெருடல். பின்னணி இசையில் எந்த இடத்தில் அமைதி வேண்டுமோ அந்த இடத்தில் அமைதியை கொடுத்து கதாபாத்திரங்களோடு நம்மையும் பயணிக்க வைத்திருக்கிறார் ரமேஷ் தமிழ் மணி.

இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் நாளை (09/12/2022) அன்று வெளியாகிறது.

விட்னஸ் – மலக் கழிவு தொட்டிகளுக்குள் ஒலிக்கும் ஓலக்குரல்…

Facebook Comments

Related Articles

Back to top button