
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
பல மாதங்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்கான சிகிச்சை மேற்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மன அழுத்தத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஞாயிறு அன்று சுஷாந்த் மறைந்த செய்தியைக் கேட்டதிலிருந்தே, அவரது சகோதரர் அம்ப்ரேந்திர சிங்கின் மனைவி சுதா தேவி உணவு சாப்பிட மறுத்துள்ளார். உறவினர்கள் வற்புறுத்தியும் அவர் எதுவும் சாப்பிடவில்லை. சுஷாந்த் பிஹாரில் இருந்தபோது அவரது பக்கத்து வீட்டில் இவர் குடும்பம் வசித்துள்ளது.
ஏற்கெனவே உடல்நலம் குன்றியிருந்த சுதா தேவி, உணவும் உட்கொள்ளாததால் திங்கட்கிழமை மாலை ஐந்து மணி அளவில் உயிரிழந்தார். அன்றுதான் சுஷாந்தின் இறுதிச் சடங்கு நடந்தது. சுஷாந்தின் மரணத்தால் கடும் சோகத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினரை சுதா தேவியின் மரணமும் பெரும் சோகத்தை கொடுத்துள்ளது.





