அறிமுக இயக்குனர் எஸ் ஜி எழிலன் இயக்கத்தில் தீபா சங்கர், எழிலன், திடியன் உள்ளிட்டவர்கள் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “கட்டம் சொல்லுது”.
கதைப்படி,
தனது மகளுக்கு ஒரு மாதத்தில் திருமணம் வைத்திருப்பதாக கல்யாண மண்டபம், மேளம், புகைப்படக்காரர், பந்தல் என அனைத்திற்கும் அட்வான்ஸ் கொடுக்கும் வேலையில் இருக்கிறார் தீபா.
அப்போதுதான் ஒருவர் மாப்பிள்ளை யார் என்று கேட்க, மாப்பிள்ளை இனி தான் பார்க்கணும் என்று அழுதுவிட்டு சென்றுவிடுகிறார் தீபா. இந்த தேதிக்குள் உன் மகளுக்கு திருமணம் நடைபெறவில்லை என்றால் உன் மகளுக்கு மாங்கல்ய பாக்கியம் இல்லை என்று சாமியார் ஒருவர் கூறிவிட அந்த தேதிக்குள் மகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று ஓடுகிறார் தீபா.
ஜோசியர் ஒருவரை சந்திக்க வரும் தீபா, அங்கு திடியனை சந்திக்கிறார். அவர், தனது நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து அரட்டை அடித்த கதையை தீபாவிடம் ஒன்று விடாமல் சொல்கிறார். அந்த நால்வரில் ஒருவரை தான் தீபா தனது மகளுக்கு மாப்பிள்ளையாக்க துடிக்கிறார். அவரது ஆசை நிறைவேறியதா.? தனது மகளுக்கு திருமணம் நடத்தி வைத்தாரா .? என்பதே படத்தின் மீதிக் கதை.
தமிழ் சினிமாவில் அவ்வப்போது சிறந்த அறிமுக இயக்குனர்களுக்கென்று ஒரு பாதை உருவாக்கப்படும். அந்த பாதை இப்படத்தின் இயக்குனர் எஸ் ஜி எழிலனுக்கு திறக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரத்திற்க்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்கள் மிகச் சிறப்பாக எடுத்தமைக்காகவே இயக்குனருக்கு பெரும் வாழ்த்துகளை தெரிவிக்க வேண்டும்.
நான்கு நண்பர்களில் ஒருவராக எழிலனும் நடித்திருக்கிறார். அறிமுக நடிகராக தெரியாமல் அனுபவ நடிகராக நடித்து ஆச்சர்யப்படுத்திருக்கிறார். பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் சிறிய நடிகர்களை வைத்து கலகலப்பூட்டிருக்கிறார். இரண்டாம் பாதி முழுவதும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து கதையை அழகாக நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர் எழிலன்.
தீபா சங்கரை மிகவும் அளவோடு வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பிரபலமான காமெடி நடிகர் திடியன், இப்படத்தில் தூணாக நின்றிருக்கிறார். இவரது டைமிங்க் காமெடி, முக பாவணை அனைத்தும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
இப்படத்தில் மிகவும் எதார்த்தமாக நடித்து அனைவரிடமும் அப்ளாஷ் வாங்கியவர்கள் சின்னத்துரை & சகுந்தலா தான். அப்பா & அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்கள் இருவரும்.
ஜாதகத்தில் இருக்கும் கட்டத்தை நம்பாதே, உன்னையும் உன் உழைப்பையும் நம்பு என்ற ஒற்றை வரியை வைத்து அழகான நேர்த்தியான ஒரு வாழ்வியலை படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் எழிலன்.
முழுக்க முழுக்க காரைக்காலில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், ஒளிப்பதிவாளர் சபரீஸ் அவர்களின் கண் வண்ணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. காட்சிகள் ஒவ்வொன்றையும் அழகுபடுத்தியிருக்கிறார்.
கதையோடு சேர்த்து நம்மை பயணம் புரிய வைத்ததில் இசையமைப்பாளர் தமீம் அன்சாரின் பங்கு அளப்பறியது.
விஜய் வேலுக்குட்டியின் எடிட்டிங் – ஷார்ப்.
கட்டம் சொல்லுது – ஆர்ப்பாட்டம் & அலப்பறைகள் இல்லாமல் கொண்டாடப்பட வேண்டிய சினிமா..