
வனிதா விஜய்குமார் இயக்கத்தில் வனிதா விஜயகுமார், ராபர்ட், ஷகிலா, பவர்ஸ்டார், பாத்திமா பாபு, செப் தாமு, ஸ்ரீமன், கிரண், ஆர்த்தி, கணேஷ், ரவிகாந்த் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “மிஸ்சஸ் & மிஸ்டர்”.
தாய்லாந்து, லண்டன் மற்றும் இந்தியா என மூன்று வெவ்வேறு நாட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தினை மூன்று இடங்களிலும் ராஜபாண்டி, விஷ்ணு ராமகிருஷ்ணன், கபில் என்ற மூன்று ஒளிப்பதிவாளர்களால் படமாக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீகாந்த் தேவா படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வனிதாவின் மகள் ஜோவிகா விஜய்குமார் படத்தினை தயாரித்திருக்கிறார்.
கதைக்குள் சென்று விடலாம்..
காதலித்து திருமணம் செய்து கொண்டு அழகான வாழ்க்கை வாழ்ந்து வரும் தம்பதிகள் தான் வனிதாவும் ராபர்டும். இவர்கள், தாய்லாந்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.
வனிதா 40வயதை எட்டியதும், தனக்கு வயதாகிவிட்டதாக எண்ணுகிறார். குழந்தை இல்லை என்றால் நம்மை பார்த்துக் கொள்ள யாரும் இருக்க மாட்டார்களே என்றெண்ணி, குழந்தை பெற்றுக்கொள்ளும் தனது ஆசையை ராபர்ட்டிடம் கூறுகிறார் வனிதா.
ராபர்ட் அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருக்க, இருவருக்குள்ளும் சண்டை வருகிறது. இருவரும் பிரிந்து விடுகின்றனர். இந்த சூழலில், வனிதா கர்ப்பமாக, ராபர்ட்க்கு தெரியாமல் குழந்தையை பெற்றெடுக்க எண்ணுகிறார் வனிதார்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
தானே இயக்குனர் என்பதால், கதாபாத்திரத்தை நன்கு உள்வாங்கி தனது கேரக்டரை அளவாக செய்து முடித்திருக்கிறார் வனிதா. மேலும், தனது அனுபவ நடிப்பால் நன்றாகவே தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியுள்ளது.
தனது இயல்பான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் ராபர்ட். வனிதாவின் தாயாக நடித்த ஷகிலாவிற்கு நடிப்பு பெரிதாக ஈர்க்கவில்லை. இரட்டை அர்த்த வசனங்களால் எரிச்சலடையத் தான் வைத்திருக்கிறார் ஷகிலா.
அதிலும், ஆந்திராவில் வரும் காட்சிகள் அனைத்துமே முகச் சுழிவை ஏற்படுத்தியிருக்கின்றன. அங்கு வரும் கதாபாத்திரங்கள் அனைத்துமே மிகவும் செயற்கைத் தனமாக படமாக்கியிருக்கின்றனர்.
அதிலும், ஸ்ரீமனின் காட்சிகள் எதற்கென்றே தெரியவில்லை. செண்டிமெண்ட் காட்சிகளும் படத்தில் துளியளவும் கைகொடுக்கவில்லை.
ஸ்ரீகாந்தின் இசையில் பின்னணி இசை சற்று கைகொடுத்திருக்கிறது. தாய்லாந்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தது. ஆந்திராவில் எடுக்கப்பட்ட காட்சிகளில் அவ்வளவு ஓட்டைகள்.
தாயின் பெருமையையும் அருமையையும் அழகாக கூறியிருக்க வேண்டிய படத்தில், ஆபாசத்தைஇடையில் கொடுத்து படத்தினை ஒட்டுமொத்தமாக கவிழ்த்திருக்கிறார் வனிதா.





