
நடிகர்கள்: ஜெய், யோகிபாபு, மீனாட்சி கோவிந்தராஜன், கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், ஆதித்யா கதிர்
தயாரிப்பு நிறுவனம்: BV Frames
இயக்குனர் : பாபு விஜய்
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம் நாதன்
இசை: கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
படத்தொகுப்பு: டார்லிங் ரிச்சட்சன்
ஆசிரமம் ஒன்றில் வளர்கிறார் ஜெய். ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மினிஸ்டர் ஒருவரின் மகளான நாயகி மீனாட்சி கோவிந்தராஜனை கண்டதும் அவர் மீது காதலில் விழுகிறார். கண்டதும் காதலில் விழுந்த ஜெய், தான் யார் என்பதை ஜெய்யிடம் மறைத்து விடுகிறார் மீனாட்சி.,
பார்த்த இரண்டாவது நாளில், மீனாட்சியும் ஜெய்யை விரும்புவதாக கூறி, இருவரும் தனது நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்கின்றனர். இருவருக்கும் ஹனீமூன் ஃபுக் செய்து அவரது நண்பர்கள், இருவரையும் கொடைக்கானல் அனுப்பி வைக்கின்றனர்.

மீனாட்சி கோவிந்தராஜனை அவரது அப்பா தேடி வருகிறார். ஹனீமுன் என்ற இடத்தில், ஜெய் தங்கிய ரெசார்டின் ஓனராக வரும் கருடா ராம், இவர்கள் இருவரும் ஒன்றாக படுக்கையறையில் இருந்ததை வீடியோவாக எடுத்து வைக்கிறார். இவர்களை போல, பல ஜோடிகளை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து, அதனை பார்ன் தளத்திற்கு விற்று பல கோடிகளை சம்பாதித்து வருகிறார் கருடா ராம்.
ஒரு கட்டத்தில் கருடா ராம், தங்களது வீடியோவை எடுத்து வைத்திருப்பதை அறிந்து விடுகிறார் ஜெய். அதன்பிறகு ஜெய் என்ன செய்தார்.? ஒரு பக்கத்தில் மினிஸ்டரின் ஆட்கள், மற்றொரு பக்கம் கருடா ராம், மற்றொரு பக்கம் கந்து வட்டி டீம் என்று இந்த டீமை ஜெய் எப்படி எதிர்கொண்டார் என்பதே படத்தின் மீதிக் கதை.
வழக்கம் போல் தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கிறார் ஜெய். வயது ஏற ஏற அழகை ஏற்றிக் கொண்டே சென்று கொண்டிருக்கிறார் ஜெய். ரொமான்ஸ், ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்து களத்திலும் இறங்கி சம்பவம் செய்திருக்கிறார் ஜெய். பல இடங்களில் விஜய்யின் ரெபரென்சை வைத்து ஓட்டிச் சென்றிருக்கிறார்.
மீனாட்சி கோவிந்தராஜனின் அழகும் நடிப்பும் படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. யோகிபாபுவின் காமெடி ஒரு சில இடங்களில் மட்டுமே வொர்க் அவுட் ஆகியுள்ளது. அநேக இடங்கள் மிகவும் ட்ரை ஆக இருந்தது படத்திற்கு பெரும் பின்னடைவு தான்.
கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து முடித்திருக்கின்றனர்.

பல படங்களில் பார்த்த ஒரு கதை தான் இந்த படத்திலும் தொடர்ந்திருக்கிறது என்பதால், படத்தின் மீது பெரிதான ஒரு ஈர்ப்பு எட்டவில்லை. ரெசார்ட், ஹிட்டன் கேமரா, ஆபாச இணையதளம், என பல படங்களில் பார்த்த ஒரு கதை தான் என்றாலும், தான் தொட்ட கதையை மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் கொண்டு சென்று ஒரு அழகான படைப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாபு விஜய்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருந்தது. அதிலும், ஜெய் நடனமாடிய பார் பாடல் ரசிக்கும்படியாக இருந்தது. ரிச்சர்ட் எம் நாதன் அவர்களின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.
சில பல குறைகள் எட்டிப் பார்த்தாலும், ஜெய் படத்தில் என்னவெல்லாம் இருக்கும் என்று நாம் எதிர்பார்ப்போமோ அது அனைத்தும் இந்த படத்தில் இருப்பது கூடுதல் மகிழ்ச்சி தான்.
ஜெய் நடிப்பை ரசிக்கும் ரசிகர்கள் அனைவரும் ஒருமுறை நிச்சயம் பார்க்கும் படமாக வெளிவந்திருக்கிறது இந்த “சட்டென்று மாறுது வானிலை” ..





