இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் செங்குட்டுவன், அம்மு அபிராமி, மற்றும் தீபக் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “பேட்டரி”. தமிழ் சினிமாவில் அவ்வப்போது வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் எட்டிப் பார்ப்பதுண்டு. அப்படியாக “பேட்டரி” என்ன மாதிரியான கதையை சுமந்து வந்திருக்கிறது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
கதைப்படி,
சப் இன்ஸ்பெக்டராக பணியில் அமர்கிறார் நாயகன் செங்குட்டுவன். பணியில் சேர்ந்த அன்றே, வழக்கு ஒன்று வருகிறது. நபர் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டு எலும்பாக கிடக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டராக வரும் யோஜ் ஜேபி.
தனது திறமையை நிரூபிக்க மும்முரமாக இந்த வழக்கில் மூக்கை நுழைக்கிறார் செங்குட்டுவன். இதனால் கடுப்பாகிறார் ஜேபி. இந்நிலையில், ஜே பி’யை மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவ விடுப்பில் இருந்த அசிஸ்டண்ட் கமிஷ்னர் தீபக், மீண்டும் பணியில் சேர்கிறார். ஜே பி கொலை வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறார். இவ்வேளையில், மிகவும் பிரபல தொழிலதிபரான அபிஷேக்கும் வித்தியாசமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.
இந்த கொலையை செய்பவர் படத்தின் நாயகனான செங்குட்டுவன் என்பது அதன் பிறகு தெரிகிறது. போலீஸாக இருந்து கொண்டு எதற்காக இந்த கொலையை செய்து வருகிறார் என்பதற்கு விடை இரண்டாம் பாதியில் வைத்திருக்கிறார் இயக்குனர் மணிபாரதி.
நாயகன் செங்குட்டுவன், தனது முதல் படம் என்பது போல் இல்லாமல் தேர்ந்த நடிகர் போன்ற ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். போலீஸாக மிடுக்காக நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் அதிரடி காட்டியிருக்கிறார். காதல் காட்சி ம்ற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் மட்டும் இன்னும் சற்று தேர்ச்சி பெற வேண்டும் செங்குட்டுவன் அவர்களே.
நாயகியாக அம்மு அபிராமி, எந்த இடத்திலும் நமக்கு நிறைவான நடிப்பைக் கொடுக்கவில்லை. நாயகியாக நடிப்பதற்கு இன்னும் சற்றும் பயிற்சி பெற்று வாருங்கள் நாயகியே.
இரண்டாம் நாயகனாக களம் இறங்கி அசரடித்திருக்கிறார் தீபக்., போலீஸ் அதிகாரியாக நடிப்பில் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். ஆக்ஷன் காட்சியையும் ரசிக்க வைத்திருக்கிறார் தீபக்.
வில்லனாக நாகேந்திர பிரசாத் மற்றும் அபிஷேக் இருவரும் சரியான தேர்வு தான் என்றாலும் பெரிதான ஸ்கோப் இல்லாததால் சற்று ஏமாற்றம் தான்.
முதல் பாதியில், அதுவும் காதல் காட்சியில் “இது என்னடா நமக்கு வந்த சோதனை” என்று தான் கேட்க தோன்றுகிறது. இரண்டாம் பாதியில் கதைக்குச் செல்லும் போது தான் கதை சூடு பிடிக்கிறது.
தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை தனது அனுபவ நடிப்பால் வழக்கம் போல் நிலைநிறுத்திச் சென்று விட்டார் எம் எஸ் பாஸ்கர்.
சற்று வித்தியாசமான கதை என்பதால் இயக்குனரை சற்று பாராட்டலாம். ரவிவர்மா பச்சையப்பனின் வசனங்களில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
சித்தார்த் விபினின் இசையில் பெரிதாக ஈர்ப்பு ஏற்படவில்லை. வெங்கடேஷ் அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று ஆறுதல்.
சிவாயதேவ் அவர்களின் ஆர்ட் பணிகள் கவனிக்க வைத்திருந்தது.
பேட்டரி – இன்னும் சற்று கூடுதலாக CHARGE ஏற்றியிருந்திருக்கலாம்.