
நாயகன் சம்பத் ஊரில் ஊதாரித்தனம் செய்து திரியும் வாலிபன். ‘ஒன்பது குழி’ கோலி விளையாட்டில் மிகப்பெரும் கில்லி நம்ம நாயகன்.
நன்றாக வாழ்ந்து சரிந்த குடும்பமாக அதே ஊரில் வாழ்ந்து வருகின்றனர் நாயகி நிகிலா விமலாவின் குடும்பத்தினர்.
சம்பத், நாயகி நிகிலாவை ஒருதலையாக காதலிக்கிறார். பல முறை சொல்லியும் சம்பத் கேட்காததால், ஊர் மக்கள் முன்னர் சம்பத்தை அடித்து விடுகிறார் நிகிலா.
மனம் நொந்து தற்கொலைக்கு முயல்கிறார் சம்பத். இந்த செய்தியறிந்து, நிகிலாவும் சம்பத் மீது காதல் வயப்படுகிறார்.
ஒரு கட்டத்தில் நிகிலாவிடம், நான் வேறு ஊருக்கு சென்று சம்பாதித்து விட்டு உங்கள் வீட்டில் பெண் கேட்கிறேன் என்று சொல்லி கிளம்புகிறார் சம்பத்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் பாலாஜி மஹாராஜா(சம்பத்) கதைக்கு ஏற்ற ஒரு தேர்வு. மிகக் கச்சிதமாக கதாபாத்திரமாக பொருந்திருக்கிறார் பாலாஜி. ஊர் சுற்றும் முரட்டுப்பயலாக இருக்கட்டும், காதலிக்கும் போது காதலனாக இருக்கட்டும் என பல விதமான முகமாக நடித்து மிரட்டியிருக்கிறார் பாலாஜி.
நாயகி நிகிலா விமல், அழகான, அமைதியான கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டுதலையும் பெறுகிறார். இதுதான் இவருக்கு முதல் படம்.
நாயகனின் நண்பனாக அப்புகுட்டி, நாயகனின் அம்மா, நிகிலா விமலின் குடும்பம் என அனைவரும் கதைக்கேற்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கின்றனர்.
படத்தின் மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவு. கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு கிராம அழகினை கண்முன்னே நிறுத்தியுள்ளது.
சார்லியின் பின்னனி இசை ஓகே என்றாலும், பாடல்கள் கைகொடுக்கவில்லை.
ரகுபதியின் இயக்கத்தில் ‘ஒன்பது குழி சம்பத்’ அழகான காதல் ஓவியம். வழக்கமான காதல் கதை தான் என்றாலும் க்ளைமாக்ஸ் காட்சி இயக்குனருக்கான தரம் .
ஒன்பது குழி சம்பத் – கனமான காதல்…





