
இயக்கம்: அனுராஜ் மனோகர்,
தயாரிப்பு: இந்தியன் சினிமா கம்பெனி
எழுத்து: அபின் ஜோசப்
இசை: ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : விஜய்
நடிகர்கள்: டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, சேரன், பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம், பிரசாந்த மாதவன்.
சரியான வேலை கிடைக்காமல் சுற்றி வருகிறார் டோவினோ தாமஸ். நன்கு படித்தும், பெரிய வேலைக்குத் தான் செல்வேன் என்று காத்திருக்கிறார்.
காதல் கைகூட வேண்டும், தனது அம்மாவின் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்குச் செல்கிறார் டோவினோ.
எப்படியாவது தேர்வெழுதி சீக்கிரமாகவே அங்கிருந்து சென்று பெரிய அதிகாரி இடத்தில் அமர வேண்டும் என்ற எண்ணத்தில், போலீஸ் ட்ரெய்னிங்கில் இருந்து கொண்டே தனது படிப்பினை தொடர்ந்து கொண்டிருக்கிறார் டோவினோ.
இதேசமயத்தில், மலைவாழ் கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளான நிலம், வீடு உள்ளிடவற்றைக் கேட்டு அரசிடம் போராடி வருகின்றனர்.

உள்ளிருப்பு போராட்டமாக மலைபிரதேசத்தில் குடிசை அமைத்து அம்மக்கள் போராடி வருகின்றனர்.
இவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீஸ் உயரதிகாரி சேரன் தலைமையில், அங்கு போலீஸ் குவிக்கப்படுகிறது.
போராட்டம் நாட்கணக்கில் செல்ல, போலீஸாரும் அங்கு டெண்ட் அமைத்து தங்கிவிடுகின்றனர். போலீஸ் வேலை என்றால் என்ன என்பதை அவ்வப்போது டோவினோவிற்கு கூறும் ஹெட் ஹான்ஸ்டபிளாக வருகிறார் சுரஜ்.
இதனாலே, இருவருக்குள்ளும் நல்லதொரு நட்பு வளர்கிறது. மலைகிராம மக்களை கண்டாலே வேண்டா வெறுப்பாக பார்க்கிறார் டோவினோ தாமஸ்.
மலைகிராம மக்களின் போராட்டம் என்னவானது.?? டோவினோ தாமஸ் இக்கதையில் எந்த இடத்தில் ஹீரோவாக தெரிந்தார்.?? இந்த கதையில் யார் நரி.??? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.

கதையின் நாயகனாக மிக அழகாக பொருந்தியிருக்கிறார் டோவினோ தாமஸ். உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் இது என்பதால், கதையோடு சேர்ந்து பயணிக்கும் ஒரு கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் டோவினோ. வேலை இல்லாமல், காதலியோடு சுற்றும் இடமாக இருக்கட்டும், தனது வேலையை துச்சமாக நினைக்கும் இடமாக இருக்கட்டும், மக்களுக்காக மக்களோடு நின்று போராடும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் தனது நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதையின் மாற்றத்திற்கான மையப்புள்ளியாக இருந்து தனது நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் சுராஜ்.
படத்தின் வலுவிற்கு ஏற்றவாறான ஒரு கதாபாத்திரமாக சேரனின் நடிப்பு இல்லாமல் போனது படத்தில் பெரும் குறைதான் என்றே கூறலாம்.
பின்னணி இசை மற்றும் பாடல்கள் நம்மை கதைக்குள் பயணிக்க வைத்திருக்கிறது.
ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். அதிலும், மலைவாழ் மக்களுக்கும் போலீஸுக்கும் நடக்கும் மோதலை படமாக்கிய விதத்திற்காகவே ஒளிப்பதிவாளருக்கு பெரும் வாழ்த்துகள். நாயகி பிரியம்வதா கிருஷ்ணன் பார்ப்பதற்கு அழகு.
நிலமே உரிமை.. உரிமைக்காக போராடும் மக்களின் கூட்டத்திற்குள் ஒரு சாமானியன் சென்று என்ன செய்யப்போகிறான் என்பதே படத்தின் ஒன்லைன்.

மிக அழகாக திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். அதிகாரத்தின் உச்சவரம்பானது எதுவரை எல்லை மீறும் என்பதையும் மிக அழகாகவே கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார். மலைகிராம வாசியாக மக்களுக்கு ஒன்னென்றால் முன் வந்து நிற்கும் கதாபாத்திரத்தில் மிகவும் எதார்த்தமாக நடித்திருந்தவர் கதையின் பலம்.
காதலுக்கான காட்சிகளை சற்று குறைத்து கதையின் மூலத்திற்குள் இன்னும் சற்று பயணித்திருக்கலாமோ என்ற எண்ணம் சற்று எட்டிப் பார்த்தது.
மொத்தத்தில்,
நரிவேட்டை – உரிமைக்கான வேட்டை..





